search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை வெப்பம்"

    • அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்
    • பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

    அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.

    இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன்.

    வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம் இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

    வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி,துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும்.

    மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சினை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

    அதன்படி நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத்துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.

    அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள் திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
    • அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை :

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி வருகிறது.

    ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் மாவட் டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது
    • இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அதிக வெப்ப தாக்கத்தினால் தூர்தர்சனின் கொல்கத்தா பிரிவில் செய்தி வாசித்து கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் லோபமுத்ரா சின்ஹா ஸ்டுடியோவிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

    இது தொடர்பாக லோபமுத்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "செய்தி வாசிக்கும் அறையில் உள்ள ஏர் கண்டிஷனர் சரியாக வேலை செய்யவில்லை.இதனால், ஸ்டுடியோவில் அதிக வெப்பம் காணப்பட்டது. நான் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வரவில்லை. என்னுடைய 21 வருட பணி அனுபவத்தில், 15 நிமிடங்கள் அல்லது அரை மணிநேர ஒளிபரப்பில், எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

    ஆனால், இந்த முறை செய்தி வாசித்து முடிக்க 15 நிமிடங்கள் மீதமிருக்கும்போதே, வறட்சியாக உணர்ந்தேன். டி.வியில் வேறு செய்தி ஓடியபோது, மேலாளரிடம் தண்ணீர் பாட்டில் தரும்படி கேட்டேன். தண்ணீர் குடித்து முடித்ததும் மீதமுள்ள செய்தியை வாசிக்க வேண்டி இருந்தது.

    வெப்ப அலை செய்தியை வாசித்து கொண்டிருந்தபோது, பேச முடியாமல் திணறினேன். பேசி முடித்து விடலாம் என முயன்றேன். டெலிபிராம்ப்டரும் மங்கிப்போனது. எனக்கும் இருண்டதுபோல் தோன்றியது. அப்போது, அப்படியே மயங்கி நாற்காலியில் சரிந்து விட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

    அப்போது சிலர் ஓடி வந்து அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் நினைவு திரும்ப உதவினர். இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

    • கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
    • அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தர்பூசணி, இளநீர், மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை 7.30 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதேபோல களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்தது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.

    அந்த வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதேபோல் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகள் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களின் இன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான கால நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெப்பத்தில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மொடக்குறச்சி, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
    • மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னிமலை:

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. சென்னிமலை பகுதியில் நேற்று மாலை திடீரென வெயில் குறைந்த வானில் கருமேங்கள் திரண்டு காணப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் திடீரென இடியுடன் கனமழை கொட்டியது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது.

    இதே போல் மொடக்குறச்சி, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    தாளவாடி-2.40, கொடுமுடி-3.20, மொடக்குறிச்சி-15.20, சென்னிமலை-22.

    • காய்ச்சல் சளி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
    • சென்னையில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், ஒரு நர்சு, ஒரு உதவியாளர். சுகாதார பணியாளர் ஒருவர் உள்ளனர். காய்ச்சல் சளி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

    • காரின் முன்னால் அமர்ந்து பயணம் செய்த சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பு என்ற 65 வயது முதியவர் பலத்த காயம் அடைந்தார்
    • அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகர் முழுவதும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதில் சுமார் 20 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், பேரிடர் மீட்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு அசோக்நகர் போஸ்டல் காலனி 3-வது தெருவில் சாலையோர காய்ந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது மரக்கிளை விழுந்து முன்பகுதி நொறுங்கியது.

    இதில் காரின் முன்னால் அமர்ந்து பயணம் செய்த சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பு என்ற 65 வயது முதியவர் பலத்த காயம் அடைந்தார். பிரபல தனியார் ஓட்டலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் நேற்று தி.நகரில் நடந்த அந்த ஓட்டலின் புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு காரில் திரும்பியபோது தான் மரக்கிளை முறிந்து விழுந்து அவரது மார்பில் குத்தியது.

    பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் பயணம் செய்த முதியவர் சுப்புவின் நண்பர் ஹாரிஸ் காயமின்றி தப்பினார். இதுதொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.

    சென்னை மந்தைவெளி நாட்டான் தெருவிலும் சாலையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இதேபோன்று பல இடங்களிலும் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.

    • மரம் விழுந்தது பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக ஊழியர்கள் விரைந்து மரங்களை வெட்டி அகற்றினார்கள்.
    • ஆபத்தான நிலையில் இருக்கும் மரக்கிளைகளையும் வெட்டி வருகிறார்கள்.

    மழையால் சென்னையில் ஈக்காட்டு தாங்கல், கொளத்தூர், அடையாறு பகுதிகளில் 6 பெரிய மரங்கள் உள்பட 30 மரங்கள் விழுந்தன. மரங்களை வெட்டி அகற்ற 6 மின் வாகனங்கள் மற்றும் 200 சிறிய மர அறுவை எந்திரங்களை மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது.

    மரம் விழுந்தது பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக ஊழியர்கள் விரைந்து மரங்களை வெட்டி அகற்றினார்கள். ஆபத்தான நிலையில் இருக்கும் மரக்கிளைகளையும் வெட்டி வருகிறார்கள். பாரம் தாங்காமல் சாய்வதை தடுக்க இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
    • அதிகாலையில் மழை பெய்ததால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.அதிகாலையில் மழை பெய்ததால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் இன்று காலை வெறிச்சோடியது. தக்காளி, கத்தரிக்காய், முட்டை கோஸ், சுரக்காய், காலி பிளவர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை, மூட்டையாக தேங்கியது. இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்தனர். கடந்த சில நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற பீன்ஸ் இன்று ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் கிலோ ரூ80-க்கு விற்ற அவரைக்காய் ரூ.50-க்கும், ரூ70-க்கு விற்ற உஜாலா கத்தரிக்காய் ரூ.45-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ.175-க்கு விற்பனையானது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை(கிலோவில்) :- தக்காளி-ரூ.30, நாசிக் வெங்காயம்-ரூ.19, சின்ன வெங்காயம்-ரூ.80, ஊட்டி கேரட்-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.25, பாகற்காய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.28, முட்டை கோஸ்-ரூ.13, புடலங்காய்-ரூ.25, பட்டை கொத்தவரங்காய்-ரூ.30, சுரக்காய்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.15.

    • வெயில் சுட்டெரிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
    • தண்ணீர் தொடர்பான நோயால் உயிரிழந்திருக்கலாம் என விசாரணைக்குழு தகவல்

    உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.

    மருத்துவமனையில சிகிச்சை பலனளிக்காமல் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15-ந்தேதி 23 பேரும், 16-ந்தேதி 20 பேரும், நேற்று முன்தினம் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிய வண்ணம் உள்ளது. இதுதான் உயிரிழப்பிற்கு காரணம் என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்த லக்னோவில் இருந்து சீனியர் டாக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கடும் வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் முதலில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அதிக வெயில் தாக்கத்திற்கான முதல் அறிகுறி இல்லை. தண்ணீர் தொடர்பான நோய் பாதிப்பாக இருக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளது.

    லக்னோ குழுவில் இடம் பிடித்துள்ள சீனியர் டாக்டர் ஏ.கே. சிங் கூறுகையில் ''உயிரிழப்புகள் தண்ணீர் தொடர்பான நோயால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக ஏற்பட்டதா? என விசாரணை நடத்தப்படும். மேலும், அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை பரிசோதனை செய்ய வர இருக்கிறார்கள்'' என்றார்.

    பொதுமக்கள் உயிரிழப்புக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதியநாத் ஆட்சியை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ''அரசின் கவனக்குறைவால் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கனும். கடந்த 6 வருடங்களில் ஒரு மாவட்ட மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. உயிரிழந்தவர்கள் மிகவும் ஏழை விவசாயிகள். அவர்கள் சரியான நேரத்தில் உணவு, மருந்துகள், சிகிச்சை பெற முடியாததுதான் அதற்கு காரணம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதல் இடிமின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • மழையினால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னை:

    சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றினால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாதபடி தவித்தனர்.

    பகலில் வெயிலினாலும் இரவில் வெப்பத்தின் தாக்குதலினாலும் மிகவும் அவதி அடைந்து வந்தனர். சென்னையில் சராசரியாக 106 டிகிரி முதல் 108 டிகிரி வரையும் பூந்தமல்லியில் 111 டிகிரி வரையும் வெயில் தனது அகோரமுகத்தை காட்டியது.

    இந்நிலையில் இன்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதல் இடிமின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், கோயம்பேடு, அம்பத்தூர், விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, கொரட்டூர், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    மழையினால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. வறுத்தெடுத்த வெயிலினால் அவதியடைந்து வந்த பொது மக்கள் மழை பெய்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

    வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
    • அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது.

    சேலம்:

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் அக்னி நட்சத்திர நாட்கள் கத்திரிவெயில் காலமாக கருதப்படுகிறது.

    அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது. சேலத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், அக்னி வெயில் காலம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக சேலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இன்றும் காலை முதல் கடும் வெப்பம் நிலவியது. தகிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    ×